வியாழன், 21 அக்டோபர், 2010

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்தோடு தமுமுக மற்றும் மமகவின் நிர்வாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.முறையாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்; தமிழகத்தில் இருக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும், இந்தியா முழுதும் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு முன் மாதிரி என்றால் அது மிகையல்ல.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் மூலம் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, மழையில் நனைந்த தாவரங்களைப் போன்ற புத்துணர்வுடன் தொண்டர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.ஆங்காங்கே நடைபெறும் தேர்தல்களில் சில இடங்களில் கடும் போட்டி ஏற்பட்டு, வாக்குச்சீட்டுகளின் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். சில இடங்களில் ஒருமித்த முடிவின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்களின்போது ஊரெங்கும் கழகச் கொடிகளும், கட்சிக்கொடிகளும் கட்டப்பட்டு பெரும் பரபரப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.சில இடங்களில் இரவு நேரங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டு விழாப் போலவும் தேர்தல்கள் நடைபெறுவதாகவும், தேர்தலை வேடிக்கைப் பார்ப்பதற்கே பெரும் கூட்டம் கூடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தமுமுக மற்றும் மமகவின் தேர்தலின் முடிவில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதை தெரிந்துக் கொள்ள அப்பகுதி ஜமாத்தார்களும், பொதுமக்களும் காட்டக்கூடிய பேரார்வம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். மாபெரும் இயக்கத்தின் மீது முஸ்லிம் மக்களும், இதர பொதுமக்களும் காட்டும் ஈடுபாட்டையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் தான் இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.எனவே வெற்றி பெற்றவர்கள் தங்கள் பொறுப்பையும், கடமையும், உணர்ந்து இறைவனுக்கு பதில் கூறவேண்டும் என்ற நினைவோடு செயல்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை நமது சகோதரர்கள் என்ற உணர்வோடு அரவணைத்து, மீண்டும் அவர்களுக்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவூட்டி பணியாற்றுவது மிகவும் அவசியமாகும். மகிழ்ச்சியில் மூழ்கிவிடமால், தங்களை ஒற்றுமையுடன் தயார்படுத்த வேண்டிய நேரமிது.

இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. வலுவான அதிமுக கூட்டணியில் நாம் இடம் பிடித்திருக்கிறோம்.நமக்கான நியாயமான அரசியல் ஒதுக்கீடுகள் கிடைக்கவிருக்கும் நிலையில், வலுவான தொகுதிகளை கண்டறிந்து, அங்கெல்லாம் நமது செயல் திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.

தீவிர உறுப்பினர் சேர்ப்பு, சுவர் விளம்பரங்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், எல்லா சமூக மக்களுடனும் நெருக்கத்தை மேலும் ஏற்படுத்துதல், வட்டார ரீதியில் செயல்படும் சமுதாய அமைப்புகளுடன் உறவை வலுப்படுத்துதல் என நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. நிதி சேகரிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே அலட்சியமின்றி, கவனமுடன், நிதானத்துடன், பணிகளை தொடங்க வேண்டும்.

பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு சில மாவட்டங்களிலும் இம்மாதத்தில் தேர்தல்கள் முடிவடைய உள்ள நிலையில், புதிய ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் உடனே களம் இறங்க வேண்டும். அது தான் நமது அடுத்த 6 மாத செயல்திட்டமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக