புதன், 28 ஜூலை, 2010

தொழுகையின் அவசியம்

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னத ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள். இத்தொழுகை எனும் இறைவணக்கம் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ள படவேண்டும் என்றால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த, காண்பித்து கொடுத்துள்ள முறையில் நிறைவேற்ற வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் கட்டளை ‘என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் – மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்.


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அறிவிப்பு இப்படியிருக்க, நமது சமுதாயத்தினர் பல்வேறு பகுதிகளில் பல முறைகளில் இப்படித்தான் தொழவேண்டும் இதுவே சரியான முறை என எண்ணி தொழுதுவருகின்றனர். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்த முறை நம்மில் பலர் சரியாக அறியாமலிருப்பதுதான். நபி வழிக்கு மாற்றமாக தொழுதால் அது தொழுகையே அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.







தொழுகை குறித்து பல இடங்களில் அல்லாஹ் தனது திருமறையில் எச்சரித்து குறிப்பிட்டுள்னான்.



…முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பட்டுள்ளது’. (அல் குர்ஆன் 4:103).


இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்கவே தான் தொழு)கிறார்கள். (அல் குர்ஆன் 107:4,5,6).

தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்… (அல் குர்ஆன் 30:31).
...இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்… (அல் குர்ஆன் 29:45).


மற்றும் ஏராளமான ஹதீஸ்களில் இத்தொழுகையை குறித்து வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது.




மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும்.
தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.


முஃமினுக்கும் காஃபிருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது. என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள் – நஸயீ, அபூதாவுத், முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்.)
இனி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) தொழுது காண்பித்த தொழுகை முறை குறித்து விரிவாக பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.






ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் :-

சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப்பாரமான (கஷ்டமான) தொழுகை இஷாவும் ஃபஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.




தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விரகுக் கட்டடைகளை சேகரிக்கும்படி செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயீட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்- புகாரி (657), முஸ்லிம்.





கண் பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை, எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி அவர் சென்று கொண்டிருக்கும்போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ‘ஆம்’ என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் – முஸ்லிம்.
நாளை மறுமையில் தாம் முஸ்லிமான நிலையில் இறைவனைச் சந்திக்க விரும்புவோர் இத்தொழுகைகளை அவற்றிற்காக பாங்கு சொல்லப்படும் இடத்தில் (பள்ளிவாசலில்) முறையாகப் பேணி (தொழுது) கொள்வாராக! திண்ணமாக அல்லாஹ் உங்களுடைய நபிக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழும் இத்தொழுகைகளும் நேரிய வழிகளில் ஒன்றாகும்.







ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப்போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கை விட்டீர்களானால் நிச்சயம் நீங்கள் வழிதவறிப் போவீர்கள். எவர் ஒளூச் செய்து-அதை நல்ல முறையில் செய்து இப்பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கம் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கின்றேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதியைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்கமாட்டார். திண்ணமாக இயலாதவரைக்கூட இரண்டுபேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்-முஸ்லிம்.


பயன்கள்:1-ஜமாஅத்துடன் தொழுவது ஆண்களுக்குக் கடமையாகும்.2-ஜமாஅத்துக்கு வராமலிருப்பது நயவஞ்சகர்களின் (முனாஃபிக்) அடையாளங்களில் ஒன்றாகும்.






ஜமாஅத் தொழுகையின் சிறப்பு :-

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும், கடைவீதியில் தொழுவதை விடவும் 25 மடங்கு அல்லது அதைவிட அதிகம் சிறந்ததாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.




அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும்வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிராத்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 647, முஸ்லிம்.




ஏதேனும் ஒரு ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று பேர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள், ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கின்றது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபுத்தர்தா (ரலி) நூல்:அபூதாவூது.





தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்-இப்னு உமர் (ரலி) நூல்:புகாரி 645, முஸ்லிம்.



பயன்கள்:
ஜமாத்துடன் தொழுவதற்கு சிறப்புகள் அதிகமுள்ளன.ஒருவர் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது மிகச்சிறந்தது.ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவதை விட்டுவிடுவது ஷைத்தான் அவர் மீது ஆதிக்கம் கொள்வதற்குக் காரணமாகின்றது.







பள்ளிக்கு வரும் முறை :-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ண்pயமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்துகளை (ஜமாஅத்துடன்) தொழுங்கள், உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள் - நூல்:புகாரி 636, முஸ்லிம், திர்மிதி 326.




நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர், தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன நேர்ந்தது, (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள், அதற்குத்தோழர்கள், நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள், தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள்! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள், தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூகதாதா (ரலி) நூல் – புகாரி 635, முஸ்லிம்.




பயன்கள்:
தொழுகைக்காக கம்பீரத்துடன் அமைதியாக வருமாறு (நபியின் மூலம்) ஏவப்பட்டுள்ளது.தொழுகைக்காக வேகமாக நடந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. ருகூவை அடைந்து கொள்வதற்காயினும் சரியே.








தொழுகைக்கு முற்கூட்டியே வந்து காத்திருப்பதன் சிறப்பு :-


ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும். அதாவது ஒருவர் உளூச்செய்து, அதை அழகாகவும் செய்து தொழுகைக்காகவே பள்ளிவாசலுக்குச் செல்வாராயின் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்து விட்டு தொழுமிடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா இவருக்கு நீ அருள் புரிவாயாக என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழுமிடத்தில்) இருக்கும்போதெல்லாம் தொழுகையிலேயே இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 647, முஸ்லிம்.






பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல் பரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு முந்தி வருவர். பின்னர் அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். மேலும் தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் அதற்காக முந்திச் செல்வர். சுபுஹுத் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவர்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார்- அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 615, முஸ்லிம்.




பயன்கள்:
தொழுகைக்காக சீக்கிரம் செல்வதில் சிறப்பு (போனஸ்) உண்டு.தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பதில் அதிக நன்மை இருக்கிறது.








காணிக்கைத் தொழுகை :-


உங்களில் எவரேனும் பள்ளியில் நுழைந்தால் அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்-அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 444, முஸ்லிம், திர்மிதி 315.



ஜும்ஆ தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது சுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். சுலைக்! எழுந்து இரண்டு ரக்அத்துகள்
சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் வந்தால் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் எனவும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர்- ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம், புகாரி 1166.


பயன்கள்:
பள்ளியில் நுழையும் போது அங்கு அமர விரும்புபவர் இரு ரக்அத்துகள் தொழுவது விரும்பத்தக்கது.ஜும்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும்.




தொழுகையை வலியுறுத்தும் எண்ணற்ற திருமறை வசனங்களில் ஒரு சில :-

29 : 45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக் இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக் நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.


5 : 58. இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.


24 : 56. முஃமின்களே! நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.


2 : 149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.


2 : 43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள் ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.


2 : 153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.


4 : 103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.


20 : 132. (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம் இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.


31 : 17. ”என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக் நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக் உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக் நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.


107 : 4,5. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக