சனி, 30 அக்டோபர், 2010

தமுமுகவின் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்கள்

இரத்த தானம்! தமுமுகவிற்கு தொடரும் விருதுகள்!!

தமிழகத்தில் மனித நேயப்பணிகளை ஆற்றிவரும் தமுமுக முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடமும் மிகுந்த பேராதரவை பெற்று வருவது தெரிந்ததே.இந்நிலையில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்று குழுமம் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது கொடுத்து ஊக்குவித்து வருகிறது. சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் விருதுகள் வழங்கும் விழா 30.10.2010 அன்று நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்ட இரத்ததான விருதுகளை வழங்கியது.

அவசர இரத்ததான சேவையில் இவ்வருடம் தமுமுக பெறும் சாதனைப் பெற்றிருக்கிறது. . இவ்வருடம் (முகாம்கள் நீங்கலாக) 1723 யூனிட் ரத்தங்களை அவசர உதவிகளுக்கு வழங்கியமைக்காக தமுமுக விருதினைப் பெற்றது. இதனை தமுமுக மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்டத் தலைவர் சீனி முகம்மது ஆகியோர் தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம். ஆர்,கே. பன்னீர் செல்வம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

சென்னை மாவட்ட தமுமுகவுக்கு 100 பேருக்கு அதிகமாக கொடுத்த கிளைகள் என்ற அளவில் 3 விருதுகள் (புழல் திருவல்லிக்கேணி மற்றும் தி.நகர்) கிடைத்தது. மற்ற கிளைகள் முறையாக பதிவு செய்யாததால் விருது பெறும் வாய்ப்பினைப் பெறவில்லை.

இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி,கே,சுப்புராஜ் ஐ.ஏ.எஸ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குநர்கள் அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் பெ. அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அமைச்சர் பன்னீர் செல்வமும் சென்னை மாநகர மேயர; மா. சுப்ரமணியமும் அனைத்து சமூக மக்களுக்கும் சேவை செய்து வரும் தமுமுகவின் மனிதநேயப்பணிகளைப் பாராட்டிப் பேசினார்.

வியாழன், 21 அக்டோபர், 2010

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்தோடு தமுமுக மற்றும் மமகவின் நிர்வாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.முறையாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்; தமிழகத்தில் இருக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும், இந்தியா முழுதும் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு முன் மாதிரி என்றால் அது மிகையல்ல.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் மூலம் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, மழையில் நனைந்த தாவரங்களைப் போன்ற புத்துணர்வுடன் தொண்டர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.ஆங்காங்கே நடைபெறும் தேர்தல்களில் சில இடங்களில் கடும் போட்டி ஏற்பட்டு, வாக்குச்சீட்டுகளின் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். சில இடங்களில் ஒருமித்த முடிவின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்களின்போது ஊரெங்கும் கழகச் கொடிகளும், கட்சிக்கொடிகளும் கட்டப்பட்டு பெரும் பரபரப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.சில இடங்களில் இரவு நேரங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டு விழாப் போலவும் தேர்தல்கள் நடைபெறுவதாகவும், தேர்தலை வேடிக்கைப் பார்ப்பதற்கே பெரும் கூட்டம் கூடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தமுமுக மற்றும் மமகவின் தேர்தலின் முடிவில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதை தெரிந்துக் கொள்ள அப்பகுதி ஜமாத்தார்களும், பொதுமக்களும் காட்டக்கூடிய பேரார்வம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். மாபெரும் இயக்கத்தின் மீது முஸ்லிம் மக்களும், இதர பொதுமக்களும் காட்டும் ஈடுபாட்டையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் தான் இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.எனவே வெற்றி பெற்றவர்கள் தங்கள் பொறுப்பையும், கடமையும், உணர்ந்து இறைவனுக்கு பதில் கூறவேண்டும் என்ற நினைவோடு செயல்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை நமது சகோதரர்கள் என்ற உணர்வோடு அரவணைத்து, மீண்டும் அவர்களுக்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவூட்டி பணியாற்றுவது மிகவும் அவசியமாகும். மகிழ்ச்சியில் மூழ்கிவிடமால், தங்களை ஒற்றுமையுடன் தயார்படுத்த வேண்டிய நேரமிது.

இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. வலுவான அதிமுக கூட்டணியில் நாம் இடம் பிடித்திருக்கிறோம்.நமக்கான நியாயமான அரசியல் ஒதுக்கீடுகள் கிடைக்கவிருக்கும் நிலையில், வலுவான தொகுதிகளை கண்டறிந்து, அங்கெல்லாம் நமது செயல் திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.

தீவிர உறுப்பினர் சேர்ப்பு, சுவர் விளம்பரங்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், எல்லா சமூக மக்களுடனும் நெருக்கத்தை மேலும் ஏற்படுத்துதல், வட்டார ரீதியில் செயல்படும் சமுதாய அமைப்புகளுடன் உறவை வலுப்படுத்துதல் என நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. நிதி சேகரிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே அலட்சியமின்றி, கவனமுடன், நிதானத்துடன், பணிகளை தொடங்க வேண்டும்.

பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு சில மாவட்டங்களிலும் இம்மாதத்தில் தேர்தல்கள் முடிவடைய உள்ள நிலையில், புதிய ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் உடனே களம் இறங்க வேண்டும். அது தான் நமது அடுத்த 6 மாத செயல்திட்டமாகும்.

சனி, 16 அக்டோபர், 2010

ஆசாத் நகரில் (புதிய பேருந்து நிலையத்தில்) புதிய ஆட்டோ ஸ்டாண்ட்.


இறைவனின் மிகப்பெரும் உதவியால் நேற்று 15/10/2010 (வெள்ளிகிழமை) ஆசாத் நகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆசாத் நகர்,ரஹ்மத் நகர், மருந்தங்காவெளி தோப்பு, ஆலங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஒரு "புதிய ஆட்டோ ஸ்டான்ட் " பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த ஆட்டோ ஸ்டான்ட் மனிதநேய தொழிற்சங்கத்துடன் (மனிதநேய மக்கள் கட்சியன்) இணைக்கபட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் நிர்வாகிகள் :-

கெளரவ தலைவர் - சகோதரர் H.M.ஹாஜா

தலைவர் - சகோதரர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது BSC.,BL.,
(தமுமுக மாவட்ட துணை செயலாளர் )

துணை தலைவர் – S.முகம்மது தாவுது (நகர செயலாளர் தமுமுக.)

செயலாளர் – S.பாட்ஷா நகர தலைவர் (இந்திய தவ்ஹீத் ஜமாஅத் )

துணை செயலாளர்கள் – S.ஆபில் கான்
S.கமாலுதீன் , S.ராஜ் குமார்
பொருளாளர் – J.மன்சூர்தீன்
செய்தி - வழக்கறிஞர் தீன் முகம்மது

செவ்வாய், 12 அக்டோபர், 2010

முத்துப்பேட்டை தமுமுக வின் நகர பொதுக்குழு

முத்துப்பேட்டை தமுமுக வின் நகர பொதுக்குழுக் கூட்டம் 09/10/2010
அன்று சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப்பிறகு சரியாக 8 மணிக்கு ஆசாத் நகரில் உள்ள
அல்மஹா பெண்கள் மதரசாவில் தமுமுகவின் மாவட்ட தலைவர் (இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது) சகோதரர் நாச்சிகுளம் M.தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுகவின் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் முத்துப்பேட்டை நகரத்தை சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக நடத்தித்தந்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே!


தமுமுகவில் மூன்றாண்டுக்கு ஒருமுறை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் வைத்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வரிசையில் இந்த பொதுகுழுவில் நகர தமுமுக மற்றும் ம.ம.க பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாய பணிகளை அதிகப்படுத்துவதற்காகவும், இன்னும் துடிப்போடு கழகப்பணியாற்றுவதற்கும் முத்துப்பேட்டை நகர நிர்வாகத்தை இரண்டாக பிரித்து அசாத் நகரில் ஒரு புதிய கிளையை அமைத்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டு அந்த அடிப்படியில் நகர நிர்வாகத்தின் கீழ் அசாத் நகரில் தமுமுக புதிய கிளை உருவாக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கபட்டனர்.



தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:-

தமுமுகவின் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள்

தலைவர் : - சகோதரர் M.நெய்நா முகம்மது (தெற்குத் தெரு)
துணை தலைவர் : - சகோதரர் M.சித்திக் அஹமது (மரைக்காயர் தெரு)
செயலாளர் :- S.முகம்மது தாவுது (ஆஸாத் நகர்)
துணை செயலாளர் : - A. நசீர் அஹமது (மரைக்காயர் தெரு)
பொருளாளர் : - S.ஜெஹபர் சாதிக் (பட்டுக்கோட்டை ரோடு)
ஆகியோரும்
இளைஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸாத் நகர் புதிய நிர்வாகிகள் :-

தலைவர் :- Y.ஷபீர் அஹமது BBA.,
துணை தலைவர் :- சதாம் ஹுசைன் BBA.,
செயலாளர் : - பாருக் BCA.,
துணை செயலாளர் : - பைஷல் அஹமது BBA.,
பொருளாளர் : - தாஜுதீன் BBA.,

ஆகியோரும்
.ம.க வின் முத்துப்பேட்டை நகர நிர்வாகம் :-

நகர செயலாளர் : - சகோதரர் - முகம்மது யாசின்
தொழிற்சங்க செயலாளர் : - சகோதரர் மாணிக்கம்

ஆகியோர்கள் வந்திருந்த அணைவர்களாலும் ஏகமானதாக தேர்ந்தேடுக்கபட்டது.
இதில் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு அவர்களின் பணிகள் தொடர்ந்து நடைபெற ஏக இறைவனிடம் பிரார்தித்தவாறு கலைந்து சென்றனர்.

நாமும் புதிய நிர்வாகிகள் பனி சிறக்க கடல் கடந்து வாழ்த்துகிறோம். அவர்களது பனிசிறக்க பிரார்த்திக்கிறோம்.
-- செய்தி மற்றும் புகைப்படம்
வழக்கறிஞர் தீன் முகம்மது

வியாழன், 7 அக்டோபர், 2010

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பும், நமது நிலையும்!

(தீர்பு வெளியான நேரத்தில் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் செய்திகளை அவதானிக்கும் தமுமுக நிர்வாகிகள்.)

சமுதாயக் கண்மணிகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நாம் எல்லோரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.482 ஆண்டு கால சிக்கல் எனக் கூறப்படும், பாப்ரி பள்ளிவாசல் விவகாரம் 1870&ம் ஆண்டில் தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் பிரச்சினை களை சந்தித்து, 1992 டிசம்பர் 6&ஆம் நாளில் நாடே பதறும் வகையில் காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அது இந்தியாவின் கறுப்பு நாள் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் தொன்மையான பண்பாடும், நாகரீகமும், மதச்சார் பின்மையும் தகர்க்கப்பட்ட நாள் அது. அன்றிலிருந்துதான் இந்தியா உள்நாட்டு வன்முறைகளினால் தனது பொன்னான வளர்ச்சியை இழந்தது.1949 டிசம்பர் 22&ல், திருட்டுத் தனமாக பாப்ரி பள்ளிவாசலில்; சிலைகள் வைக்கப்பட்ட நாளிலி ருந்து தொடங்கப்பட்ட வழக்கில், கடந்த நவம்பர் 30 அன்று அலஹா பாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அது தீர்ப்பல்ல, இந்தியாவின் நீதி அமைப்பையே கொலை செய்த கொடுமை என்பதுதான் உண்மை.

பாப்ரி பள்ளிவாசல், இரண் டாவது முறையாக ஷஹீதாக்கப் பட்டிருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் அது ஒரு கறுப்பு நாளாகும்.நாங்கள் தலைமையகத்தில் அமர்ந்து ஆங்கிலத் தொலைக்காட் சி சேனல்களை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் அவர்கள், இது கட்டப்பஞ்சாயத்து முறையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என இடித்துரைத்தார்.அந்த துயரமான தருணத்தில் அவரது வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. அதே கருத்தை இன் னொரு சட்ட நிபுணரான பி.பி.ராவ் அவர்களும் வழிமொழிந்தது மேலும் ஆறுதலாக இருந்தது.

பரபரப்பான தொலைக்காட்சி விவாதங்களின் போது, பிரபல நீதியரசர் ராஜேந்திர சச்சார், “அங்கு பள்ளிவாசல் இத்தனை நாள் இருந்ததே அதைப் பற்றி ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை? அது அனுபவ சொத்து இல்லையா?” என எதிர் கேள்விகளை எழுப்பினார்.ஆனால், காவிகளின் வெற்றிக் கூச்சலில் அவை கண்டுகொள்ளப் படவில்லை.அந்த நேரத்தில் தீர்ப்பு குறித்து தமுமுகவின் கருத்தரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் நமது அலுவலகத்துக்கு படையெடுத் தன. தீர்ப்பு குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. உடனே டெல்லியில் உள்ள நமது நண்பர்களிடமும், அலஹாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நமது பத்திரிக்கை நண்பர்களிடமும் தொடர்பு கொண்டேன்.

தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மத்தி யில் கொந்தளிப்பையும், நடுநிலையாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப் பதால், நாடு முழுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டதை அறிய முடிந்தது.ஒரு முதிர்ச்சிமிக்க தலைமை இதுபோன்ற தருணங்களில் கொந் தளிப்பை தூண்டிவிடக் கூடாது. மிகுந்த பொறுப்புணர்வை வெளிப் படுத்தி, கருத்துக்களை நிதானமாக வெளியிட வேண்டும். எனவே 5 மணிக்கு தீர்ப்பு வெளியாகி, 6 மணிக்கெல்லாம் பத்திரிகையாளர் களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

தீர்ப்பு எந்நிலையில் வந்தாலும் ஏற்போம் என்றீர்களே? இப்போது என்ன சொல்கிறீர்கள்? என வினவியபோது, இது ஒரு காவி தீர்ப்பு. நீதிபதிகளிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டிருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இப்போதைக்கு நீதிமன்ற நட வடிக்கை என்ற அளவில் ஏற்றாலும், தீர்ப்பில் மாறுபட்ட கருத்து உள்ளதால் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். இதுகுறித்து பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவுடனும், அகில இந்திய தனியார் சட்ட வாரியத்துடனும் விவாதிப்போம் என்றெல்லாம் பல்வேறு விஷயங்களைக் கூறி னேன். ஆனால் ஒருசில நாளிதழ் கள் முன்னால் உள்ளதையும், பின்னால் உள்ளதையும் கத்தரித் துவிட்டு, நாம் சொல்லாத ஒன்றை “தீர்ப்பை தமுமுக வரவேற்கிறது’’ என்ற வாசகத்தை பிரசுரித்துள்ளன.ஆனால் நக்கீரன் ஏடு நமது கருத்துக்களை உள்வாங்கி சரியாக செய்தி வெளியிட்டது. (தனி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது).

நாம் இந்திய அளவில் கவனிக் கப்படும் இயக்கமாக இருப்பதால் தான், நாம் அழைக்காமலேயே மீடியாக்கள் நமது அலுவலகத்துக்கு ஓடோடி வந்தன.அந்த நேரத்தில் ஏராளமான சகோதரர்கள் தீர்ப்பை எதிர்த்து நமது போராட்டம் என்ன? என்று வினவினார்கள். பலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டநிலையில் பேசினார்கள். பேசியவர்களில் பெரும்பாலும் ஜமாஅத்தினர் என்பதும், அவர்களில் உலமாக் களும் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. அவர்களின் கோபங்களின் நியாயங்களை உணர முடிந்தது.ஆனால், சமுதாயத்தை சரியாக வழிநடத்த வேண்டிய தலைமைப் பொறுப்பு நம்மிடம் இருப்பதால், நாமும் உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இரண்டு நாள் அல்லது மூன்று நாள் கழித்து நமது கடும் கருத்துக்களை வெளியிடுவதற்கும், கொந்தளிப்பான நேரத்தில் அதே கருத்துக்களை வெளியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

காரணம், மக்களில் பெரும்பா லோர் சாமானியர்கள். அப்பாவி கள். அவர்களை நெறிப்படுத்துவது நமது தலைமைப் பண்புகளில், சமுதாயக் கடமைகளில் முதன்மை யானது என்பதால், “யாரும் போராட்டங்களில் இப்போது இறங்க வேண்டாம்“ என்று கேட்டுக் கொண்டோம்.காரணம், இந்தியா முழுக்க அன்றைய பொழுதில் பரபரப்பும், நெருக்கடியும் நிலவியது. ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா என இறங்கியிருந்தால் மக்கள் ஒரு சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருப் பார்கள். ஆனால் கட்டுப்பாடு இருந்திருக்கிறது. யாராலும் தடுத்திருக்கவும் முடிந்திருக்காது. வன்முறைகள் நிகழ்ந்திருக் கலாம். துப்பாக்கிச் சூடு கூட நடந்திருக்கலாம். அதன் எதி ரொலி, தமிழகத்தைத் தாண்டி இந்தியாவெங்கும் எதிரொலித் திருக்கக் கூடும். தொலைக் காட்சி களில் அதையெல்லாம் பார்த்து, நாடு முழுக்க மக்கள் சாலைகளில் இறங்கி, அது பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.

அது நமது எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து, தங்களின் காவி கலவரங்களைத் தொடங்கி ரணகளமாக்கி இருப்பார்கள். நல்லவேளையாக, இறைவனின் அருளால் அப்படி எதுவும் நடை பெறவில்லை.இப்படி எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதால்தான் நாம் உடனடியான ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை.இது நீதிமன்றத் தீர்ப்பாக உள்ள நிலையில், பல்வேறு சமூகத்தினரும் நமக்கு ஆதரவாக மாறியுள்ள சூழலில், இதை ராஜதந்திரமாக எதிர்கொள்ளும் முடிவைத்தான் இந்தியா முழுக்க உள்ள முஸ்லிம் அமைப்புகள் எடுத்தன.எல்லோரும் அமைதிகாக்க வேண்டும் என்றும், சமூகநல்லி ணக்கமும், நாட்டின் பொது அமைதியும் கெட்டுவிடக் கூடாது என்றும் எல்லா முஸ்லிம் தலைவர்களும், அறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர். எல்லோரின் ஒரே முடிவு, இதை சட்டரீதியாக அணுகி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது.

எனவேதான், நாம் போராட்டங் களைத் தவிர்த்து, முதல் கட்டமாக இத்தீர்ப்பின் அபாயங்களை மக்க ளுக்கு எடுத்துக்கூறும் விதமாக ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து மதச்சார்பற்ற, முற்போக்கு பிரமுகர்களை அதில் உரையாற்றச் செய்ய வேண்டும் என்று அக்டோபர்&1 அன்று கூடிய தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு செய்துள்ளோம்.இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 15 அன்று டெல்லியில் நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், தீர்ப்பு குறித்து ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் தமுமுக சார்பில் பங்கேற்க டெல்லி செல்ல உள்ளேன். அதன்பிறகு பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக அகில இந்திய அளவில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பரிசீலித்து, நமது தமுமுக சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்தெல்லாம் விவாதிப்போம்.

அதுவரை பொறுமை காப்போம்.

நீங்கள் மனம் தளராதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். (உண்மையான) இறை நம்பிக்கைக் கொண்டவர் எனில், நீங்களே இறுதியில் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 3:139)

என்றும் அன்புடன்...எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

நக்கீரன் பேட்டி

தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், “முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு காவித் தீர்ப்பு. நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தேசிய அளவில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்க இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அனைத்து சக்திகளுக்கும் இந்தத் தீர்ப்பு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. அமைதி ஏற்படவேண்டுமென்ற அடிப்படையில் இதை வரவேற்கலாமே தவிர, உண்மையில் மேல்முறையீட்டில்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு வெற்றி கிடைக்கும்” என்றார்.

தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.

நக்கீரன் அக். 2-5, 2010)

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

முத்துப்பேட்டை நகர தமுமுக மற்றும் மமக நகர நிர்வாக குழு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

முத்துப்பேட்டை நகர தமுமுக மற்றும் மமக நகர நிர்வாக குழு

தமிழ்நாடும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகர நிர்வாக குழு (03-10-2010) இன்று சகோதரர் முன்னாள் நகர துணைசெயலாளர் சித்திக் அவர்களது இல்லத்தில் நகர தலைவர் சகோதரர் S.முகம்மது தாவுது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 9 ம்தேதி நடைபெறும் நகர நிர்வாக தேர்தலை அதிகமான சகோதரர்களை திரட்டி சிறந்த நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது என்றும். அந்த நிர்வாகத்தின் மூலம் எதிர்வரும் காலங்களில் கழக மற்றும் கட்சிப்பணிகளை அதிகப்படுத்துவது எனவும் , நமது பெரியக்கடைதெருவில் புதிதாக ஒரு அலுவலகம் வாடகைக்கு எடுப்பது என்றும் நிர்வாக கூட்டத்தில் ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டது.

இதில் நகர நிர்வாகத்தை சேர்ந்த அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

செய்தி - வழக்கறிஞ்சர் தீன் முகம்மது.

நகர பொதுக்குழு

தமிழ்நாடும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகர பொதுக்குழு எதிர்வரும் 09-10-2010 (சனிக்கிழமை) ஆசாத் நகரில் உள்ள அல்மஹா பெண்கள் மதரசாவில் தலைமை தேர்தல் அதிகாரி மண்டலம் ஜைனுலாபுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது. தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அனைத்து சகோதரர்களும் மற்றும் ஆதரவாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பது ....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

மனிதநேய மக்கள் கட்சி

முத்துப்பேட்டை நகரம்.