செவ்வாய், 13 டிசம்பர், 2011

பத்திரிக்கை நண்பர்களே... இது நியாயம்தானா?

ஜனநாயகத்தில் பத்திரிக்கைத்துறை நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகிறது. பாராளுமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என இம்மூன்றுக்கும் அடுத்த நிலையில் பத்திரிக்கைத்துறை இருக்கிறது. ஜனநாயகத்தின் செவிகளாகவும், விழிகளாகவும் அவை செயல்படுகின்றன.


ஒரு கட்சி ஆட்சி முறை நிலவும் நாடுகளிலும், பலகீனமான எதிர்க்கட்சிகள் செயல்படும் நாடுகளிலும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிகளாக செய்தி ஊடகங்கள் தான் செயல்படுகின்றன. சமீபகாலமாக ஜனநாயகத்தில் நாங்கள்தான் முதல் தூண் என்பது போல செய்தி ஊடகங்கள் நடந்து கொள்வதாக கருத்தும் & கண்டனங்களும் பரவலாக உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தையே பணிய வைக்கும் ஆற்றல் தமக்கு இருப்பதாக ஊடகங்கள் கருதுவதும், மக்களின் சிந்தனைப்போக்கை திசைக் காட்டும் கருவிகளாக தங்களை மிகைப்படுத்திக் கொள்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நாகரீகமான அச்சுறுத்தலாகவே அஞ்சப்படுகிறது.


அனைவரையும் தட்டிக் கேட்கும் தகுதி தங்களுக்கு இருப்பதாக கருதிக் கொள்ளும் செய்தி ஊடகத் துறையினர், தங்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகக் கூறிக் கொள்வது வரம்பு மீறிய ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள்.

சரி, அனைவரையும் தட்டிக் கேட்கும் தகுதியும், சுதந்திரமும் தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொள்ளும் இவர்கள் தங்கள் கடமைகளில் நேர்மையாக செயல்படுகிறார்களா என்றால், ஏமாற்றம் தான் மிஞ்சும். சிறந்த இந்திய நாளிதழ்களில் ஒன்றாக கவனிக்கப்படும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று தொடர்ந்து, பெரியாரிச&திராவிடர் கழக செய்திகளை 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறக்கணித்து வருவது ஒரு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

தமிழகத்தில் செயல்படும் பல பத்திரிக்கைகள் மத, சாதி விரோத பார்வையுடன் செய்திகளை வெளியிடுவது தொடர்ந்து நடக்கிறது. அடுத்தவர்களிடம் நேர்மையைத் தட்டிக்கேட்கும் செய்தியாளர்களிடம் நேர்மை இருப்பதில்லை. தலைநகர் சென்னையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினால், ஒரு செய்தியாளர் குறைந்தது 500 ரூபாயாவது 'லஞ்சம்' கேட்கிறார். ஓரிரு பத்திரிக்கைகளைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு.

செய்தியை வெளியிட பணம் கேட்பவர்கள்; செய்திகளையாவது, வெளியிடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. சில ஊடகங்கள் சிறுபான்மையின கட்சிகளும், சமூக நீதியை வலியுறுத்தும் அமைப்புகளும் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கு தங்கள் செய்தியாளர்களை அனுப்புவதே இல்லை. அந்தளவுக்கு அவர்களிடம் 'நேர்மையும்' 'இதழியல் தர்மமும்' ஊடுருவியிருக்கிறது போலும்!

சிறுபான்மையினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரும் செய்தியாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான் மையோடுதான் வருகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அவர்களை எவ்வளவுதான் கண்ணியப்படுத்தினாலும், மற்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் சிறுபான்மை யினருக்கு கொடுப்பதில்லை. அங்கு உபசரிப்பில் குறை இருக்கிறதா? அவர்கள் கருத்துக்களில் தவறு இருக்கிறதா? அல்லது நாங்கள் இந்திய முஸ்லிம்களாக வாழ்வதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என்பதை எல்லாம் அவர்கள்தான் விளக்க வேண்டும்.

பத்திரிக்கைகள் யாரையும் காயப்படுத்தலாம்; சுதந்திரமாக விமர்சிக்கலாம்; மறுதரப்பு நியாயங்களையும், செய்திகளையும் விசாரிக்காமலேயே செய்திகளை வெளியிடலாம்; யாரையும் புறக்கணிக்கலாம்; ஆனால், இதையெல்லாம் யாராவது சுட்டிக் காட்டினால் அவர்கள் மன்றாடி மன்னிப்பு கேட்கும் வரை புறக்கணிக்கப்பதும், பழிவாங்குவதும் பல செய்தி ஊடகங்களின் 'தர்மமாக' இருக்கிறது.

சினிமா நட்சத்திரங்களுக்கு தலைவலி வந்தால்கூட அது பெரிய செய்தியாகிறது. பிரபலங்கள் வீட்டில் குடும்பச் சண்டை நடந்தால் அது அம்பலப்படுத்தப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை? நாட்டுக்குத்தான் என்ன நன்மை? பத்திரிக்கையாளர்கள் சிந்திக்க வேண்டாமா? பணம் இல்லாத பொதுநல அமைப்புகள்&சமூக நீதிக்காக களமாடும் கட்சிகளின் வெற்றிகள், சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்களின் உழைப்புகள் ஊடங்களில் ஓரங்கட்டப்படுவது நியாயம்தானா?

அத்வானி செல்லும் பாதையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு தொடர்பாக நேரு, கென்னடி என பலர் முதலில் விசாரிக்கப்பட்டார்கள். ஆனால் இரண்டு முஸ்லிம்கள் விசாரிக்கப்படும்போது அது அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? எதிர்மறை செய்திகளைத் தான் இவர்கள் விரும்புகிறார்களா-?

இந்துத்துவ சூழ்ச்சிகளாலும், அரசுகளின் நரித்தனங்களாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை மக்களையும், அமைப்புகளையும் செய்தி ஊடகங்கள்தான் கைதூக்கி விட வேண்டும்; வழிநடத்த வேண்டும்; வளர்த்து விட வேண்டும்! அந்த ஜனநாயகப் பொறுப்பு அவர்களுக்கு உண்டு!

விமர்சனத்துக்கு உட்படாதவர்கள் யாருமில்லை, இது ஊடகங்களுக்கும் பொருந்தும்.


- மு.தமீமுன் அன்சாரி
மக்கள் உரிமை தலையங்கம்
நவ.11-17

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

முத்துப்பேட்டையில் அணைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து ‘முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாத்’(MUMJ) என்ற பெயரில் பொது ஜமாத்தாக சில காலம் செயல்பட்டு வந்தது ஏதோ காரணமாக அது முடக்கப்பட்டு கிடப்பில் கிடந்து வந்தது. முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் முடங்கியதிலிருந்து ஊர் கேட்பாரற்று கிடந்ததோடு அவரவர்கள் நாட்டாமை போல செயல்பட்டுவந்தார்கள். ஊரின் நலனுக்காக பாடுபட ஓர் தலைமையின் கீழ் பொது ஜமாத் இல்லாமல் இருந்த இந்த தருணத்தில் அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முன் முயற்சியுடன் மீண்டும் அணைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து “முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்” (MMJ) என உருவாகியுள்ளது. கடந்த காலங்களைப்போல தலைவர். செயலாளர். பொருளாளர் என்று இல்லாமல் அணைத்து முஹல்லாவில் இருந்தும் தலா 1 நபர் வீதம் 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த 10 நபர்களையும் கொண்டு அமைப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்குழு தான் எதிர்வரும் காலங்களில் ஊரின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் இறைவன் நாடினால். இந்த அமைப்புக்குழுவில் ம.ம.க வின் மாவட்டச் செயலாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக்.M.A., அவர்களும், தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.வழக்கறிஞர்.எல்.தீன் முஹம்மது.BSc.,BL., அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்...


இந்த அணைத்து முஹல்லா கூட்டத்திற்கு முறையான அழைப்பு கொடுக்கப்பட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நூர் பள்ளியும், ஜாக் அமைப்பின் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகமும் பங்கெடுக்கவில்லை. தலைமையின் கட்டுபாடோ????



சனி, 10 டிசம்பர், 2011

திருவாரூரில் தமுமுகவின் பாபரி மஸ்ஜித் மீட்ப்பு போராட்டம்.

தமுமுகவின் பாபரி மஸ்ஜித் போராட்டம் டிசம்பர் 06,2011 - அன்று திருவாரூரில் நடைபெற்றது. தமுமுகவின் மாவட்ட தலைவர் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோ.கோவை முஜிபு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் ம.ம.க வின் மாவட்ட செயலாளர் சகோ.முத்துப்பேட்டை மாலிக் அவர்களும் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமான பெண்கள் உள்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே...











சனி, 3 டிசம்பர், 2011

திருவாரூரில் டிசம்பர் 6 ல் – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இழந்த உரிமையை மீட்போம்… இருக்கும் உரிமையை காப்போம்..
நாங்கள் ராமருக்கோ, ராமர் கோயில் கட்டப்படுவதற்கோ, எதிரானவர்கள் அல்லர். உண்மைக்கு மாறாக, ஆங்கிலேய வரலாற்றுப் புரட்டர்களின் பிரிவினைவாத சூழ்ச்சிகளை நம்பி பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதையும், அங்குதான் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்பதையும் தான் எதிர்க்கிறோம்.



அயோத்தியில் உள்ள பிற ராமர் கோயில்களுக்கு நிலங்களை வாரி வழங்கிய பாபர், இந்துக்களின் மீது அன்பைப்பொழிந்தவர். தன் மகன், முகலாய மன்னர் ஹூமாயூனுக்க எழுதிய ஒரு கடிதத்தில், இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மாட்டுக்கறி உண்பதைக் கைவிடு என்று கட்டளையிட்டவர். அப்படியிருக்கையில், எப்படி ராமர் கோயிலை இடித்து, மசூதி கட்ட முடியும்? தயவு செய்து சிந்தியுங்கள்.


டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜிதை முன்னிறுத்தி நடத்தும் அறவழிப்ட போராட்டங்கள் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வரலாற்று உண்மைகளைப் புரியவைக்க, சட்டத்தின் நீதியை நிலைநாட்ட, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்னையைக் காக்க, இந்தியாவின் பாரம்பரிய புகழின் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க, நல்லிணக்கத்தை வலிமைப்படுத்த நடக்கும் போராட்டம் என்பதை மறக்காதீர்.


அக்டோபர் 30 – 2010 அன்று 61 ஆண்டு கால இவ்வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய வினோத தீர்ப்புக்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தது. இப்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.



குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு சமூகம், தன்னை நிரபராதிகள் என நிரூபிக்கத் துடிக்கிறது. அறவழிப்போராட்டங்கள் மூலம் விரைவாக நீதியைப் பெற விரும்புகிறது. எனவே..


பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், லிபர்ஹான் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் டிசம்பர் 6ம் தேதி காலை 10 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருவாரூர் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற உள்ளது.



ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனுவை திருவாரூர் மாவட்ட நீதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

நேற்று மாலை 5 மணிக்கு முத்துப்பேட்டை தமுமுக அலுவலகத்தில் திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினை சார்ந்த சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை தமுமுக நகர தலைவர் ஜனாப். சம்சுதீன் அவர்கள் கூறுகையில், திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவினர் மற்றும் ஏனைய சகோதரர்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும், அதற்கான ஏற்பாட்டினை முத்துப்பேட்டை தமுமுகவானது செய்து கொண்டு வருகிறது என்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையினை தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை. மஜீது நிகழ்த்த உள்ளார் என்ற தகவலையும் நமது செய்தியாளரிடம் தமுமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை. முஹம்மது மாலிக் அவர்கள் கூறினார்.


நியாயவான்களே.. பங்கேற்பீர்..

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். திருவாரூர் மாவட்டம்

சனி, 19 நவம்பர், 2011



பேரூந்து மற்றும் பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்


மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகரம் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:



தமிழக அரசு பேரூந்து கட்டணத்தை 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலும், ஆவின் பாலை 6.25 ரூபாய் வரையிலும் விலையை உயர்த்தியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கக் கூடியதாகும்.



ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த விலை உயர்வு மேலும் சுமையாக அமைந்துள்ளது.



எனவே தமிழக முதல்வர் அவர்கள், ஏழை எளிய, நடுத்தர மக்களின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

செவ்வாய், 15 நவம்பர், 2011

முத்துப்பேட்டையில் அடையாளம் தெரியாத 70 வயது பெரியவர் ஆற்றில் மூழ்கி சாவு!! தமுமுக மற்றும் ததஜ வினர் தமுமுகவின் ஆம்புலன்ஸ் உதவியுடன் நல்லடக்கம்.



முத்துப்பேட்டை, நவம்பர் 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கோரையாற்றில் ஒரு பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்திகள் வந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அங்கு கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அந்த பிணத்தை த.மு.மு.க வின் நகர தலைவர் ஜனாப். M.சம்சுதீன், த.மு.மு.க .வின் நகர பொருளாளர் ஜனாப். S.ஜெஹபர் சாதிக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜனாப் .A .அன்சாரி, TNTJ உறுப்பினர்.ஜனாப்.பசூல் ரஹ்மான் ஆகியோர் ஜனாஸாவை கைப்பற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்சின் மூலம் பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பிணத்தின் உறவினர்கள் யார் என்று தெரியாமல் இருந்ததால் மேலும் இவர் முஸ்லிம் மதத்தை சேர்த்தவர் என்று தெரிந்த காரணத்தால் போலீசார் அனுமதியுடன் ஜனாஸாவை ஆசாத் நகர் முகைதீன் பள்ளி மையவாடியில் இன்று மாலை அப்பகுதி மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.


ஞாயிறு, 13 நவம்பர், 2011

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் எங்களுடை சமுதாய சேவைகளை அங்கீகரித்து எங்களுக்கு வாக்களித்த சகோதரர் சகோதரிகளுக்கு முத்துப்பேட்டை தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி நன்றி நன்றி

செவ்வாய், 11 அக்டோபர், 2011

முத்துப்பேட்டை - மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு.

இறைவனின் திருப்பெயரால்...

முத்துப்பேட்டை – நகர கிளை மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் 2011 உள்ளாட்சி தேர்தல் அறிக்கையானது 11.10.2011 இன்று காலை 11.30 மணிக்கு முத்துப்பேட்டை – பெரிய கடைத்தெருவில் உள்ள மனித நேய மக்கள் கட்சியின் நகர கிளை அலுவலகத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு ”பஸ்” சின்னத்தில் போட்டியிடும் முஹம்மது மாலிக் அவர்கள் வெளியிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் நகரத்தலைவர். எம்.சம்சுதீன், துணைத்தலைவர். முஹம்மது யூசுப், தமுமுக நகர துணைசெயலாளர் எம். சித்திக் அஹமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் வக்கீல் தீன் முஹம்மது, தமுமுக முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஹீமாயூன் கபீர், தமுமுக நகர செயலாளர் எஸ். தாவூது, தமுமுக நகர பொருளாளர் ஜெகபர் சாதிக், தமுமுக நகர ஒன்றிய செயலாளர் எம். நெய்னா முஹம்மது, மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் கே.முஹம்மது யாசீன் மற்றும் கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

முத்துப்பேட்டையில் உள்ள பொது மக்கள் எதிர்பார்க்கும் 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பானது தேர்தல்; அறிக்கையாக வெளியிடப்பட்டது.




1. தினமும் காலை, மாலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்

2. கொசுத்தொல்லை முற்றிலுமாக ஒழிக்கப்படும் (கொசுவினால் ஏற்படும் தொல்லைகள் முற்றிலும் தடுக்கப்படும்)

3. சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

4. தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக தெருவிளக்கு அமைத்து தரப்படும்.

5. சொத்து வரிவிதிப்பில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு 20% வரி குறைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

6. பழுதடைந்த சாலைகள் உடனடியாக மேம்படுத்தப்படும்.

7. மக்கள் உடல்நலம் மற்றும் நோய்தடுப்புக்கு விரைந்து செயாலாற்றப்படும்.

8. முத்துப்பேட்டையில் உள்ள அணைத்து குளங்களும் தூய்மை படுத்தப்பட்டு சுகாதார குளங்களாக மாற்றப்படும்.

9. பேரூராட்சி அலுவலக பணிகள் விரைந்து நடக்க முழுமையாக கணினி மையமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

10. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

11. பொதுசுகாதாரம், துப்புரவு கழிவுநீர் அகற்றல் கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் நவீனப்படுத்தப்படும்.

12. 17 வது மற்றும் 18 வது வார்டுகளில் (தெற்குக்காடு,மருந்தங்காவளி) நிலவும் குடிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகான மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்படும்.

13. இரயில்வே நிலையம் அருகில் நவீன கழிப்பறை அமைத்து தரப்படும்.

14. நகரின் மையப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு நவீன பூங்கா அமைத்து தர முயற்சி எடுக்கப்படும்.

15. தெற்குகாட்டில் மழைக்காலங்களில் நீர்தேக்கம் ஏற்பட்டு மக்கள் வெளியேறும் அளவுக்கு அவல நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க உடனடியாக வடிகால் வசதி அமைத்து தரப்படும்.

16. 10 வது வார்டில் நவீன கழிப்பறை வசதி, சாலை வசதி மற்றும் சுடுகாடு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

17. பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை நவீனப்படுத்தி தர முயற்சி எடுக்கப்படும்.

18. புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகளான ரஹ்மத் நகர், பரக்கத் நகர், மன்சூர் நகர், கொய்யா தோப்பு, MMD காசிம் நகர், திமிலத்தெரு, இமாம் புஹாரி நகர், மற்றும் S.P.K.M, அகாஸ் தோட்டவளாகம் ஆகிய பகுதிகளுக்கு சாலைவசதி, குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு ஆகியவைகள் உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

19. புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ,கார்,வேன் ஸ்டாண்டை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

20. பழைய பேரூந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

21. துப்புறவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்து தரப்படும்.

22. குண்டாகுளத்தெருவிலிருந்து கொய்யா தோப்பிற்கு செல்ல சாலை அமைத்துத்தரப்படும்.

23. மீனவர்கள் நலன் கருதி ஆசாத் நகர் முதல் பீடி துறை வரை கோரை ஆற்றில் தூர் வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

24. பேட்டை செக்போஸ்டிலிருந்து பாமனி ஆறுவரை தரமான சாலை அமைத்து தரப்படும்

25. மாதாகோவில் தெரு (புதுக்குடியிருப்பு) பகுதியில் நவீன கழிப்பறை வசதி செய்து தரப்படும்

26. ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற முயற்சி எடுப்பேன்

27. நவீன வசதியுடன் கூடிய மீன் பிடித்துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

28. முத்துப்பேட்டையில் மீன்வளத்துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

29. மின் விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளை தவிரக்க துணை மின் நிலையம் (110 மெகாவாட்) அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்

30. அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்

31. அரசு அறிவிக்கும் அணைத்து நலத்திட்டங்கள் அணைவருக்கும் கிடைக்க முயற்சி செய்வேன்.

“விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் தமுமுக மற்றும் ம.ம.க வின் மக்கள் சேவைபணிகள் என்றென்றும் தொடரும்....”


ஊழலை எதிர்ப்பதில் உறுதி
திறமையான நிர்வாகம்
முடிவெடுப்பதில் வேகம்
எளிமையான அனுகுமுறை
அடிக்கடி மக்கள் சந்திப்பு


வாக்களிப்பீர்... பேரூந்தி சின்னத்திற்கு...

திங்கள், 10 அக்டோபர், 2011

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் S . முஹம்மது மாலிக் M.A அவர்களிடம் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்பொழுது அவர் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தார்.

பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு :












































சனி, 8 அக்டோபர், 2011

ஊழலற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் ம.ம.க வேட்பாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக் அவர்கள் முத்துப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

தமுமுகவின் ஆதரவு பற்ற வேட்பாளரான மாலிக் அவர்களுக்கு பேரூந்து சின்னத்தில் வாக்களிப்பீர்...