புதன், 15 ஆகஸ்ட், 2012

கடலூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜின்னா பாய் அவர்கள் மரணம். ஒரு தொண்டனின் உருக்கமான கடிதம்.

கடலூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜின்னா பாய் அவர்கள் மரணம்.

ஒரு தொண்டனின் உருக்கமான கடிதம்.

தலைவரே............

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாய்... ஒலித்துக் கொண்டிருக்கும் சமுதாயப்பெரியக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்றைக்கு அசைக்க முடியாத ஆல விருட்சமாக கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதென்றால்... இதன் பின்னணியில் வேர்களாகவும் விழுதுகளாகவும் இருந்து தம்மையே உரமாக்கி அல்லாஹ்வின் துணை கொண்டு இந்த பேரியக்கத்தை தூக்கி நிறுத்திய பெருமைக்குரியோர் பலர் இருக்கின்றனர்.




அத்தகையவர்களில் ஒருவர் தான் தலைவர் எஸ்.எம்.ஜின்னாஅவர்கள். 
இந்திய துணைக்கண்டத்தில் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இந்தப் பேரியக்கம் நிர்மாணிக்கப்பட்ட வேளையில் கடலூர் மாவட்டத்தில் நிர்வாகக் குழுவில் ஒருவராக இடம்பெற்றார்.சிறிது காலம் கழித்து கடலூர் மாவட்ட கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று மாவட்டம் முழுவதிலும் கிளைகளை கட்டமைக்க சூறாவளியாய் களப் பணியாற்றினார். இந்த நாள்களில் அவர் சந்தித்த துன்பங்களும் தொல்லைகளும் கொஞ்ச நெஞ்சமல்ல...

இவரது களப்பணியை  கண்டு பொறுக்காத காவல் துறை இவர்மீது பல்வேறு பொய்வழக்குகளை புனைந்து இவரை முடக்க சதி செய்தது.இவரது ஊர் ஜமாஅத் கூட இவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இவரை 
புறக்கணித்தது.

இந்த துயரங்கள்ஒருபுறமிருக்க 2004 ஆம் ஆண்டு இந்த பேரியக்கத்தில் 
இருந்து வெளியேறி சென்று வேறொரு இயக்கத்தை உருவாக்கியவர்கள், 
ஜின்னா  தம்மோடு வருவார் என்று  எதிர்பார்த்தனர்.ஆனால் தலைவர் ஜின்னா அவர்களோ.. அவர்களது எதிர்பார்ப்பை  தவிடுபொடியாக்கி
விட்டு தாம் பாடுபட்டு உருவாக்கிய இந்த பெரியக்கத்திலேயே இன்னும் வீரியமாக களப்பணியை தொடர்ந்தார்.

இதனால் சினங்கொண்ட அந்த அமைப்பினர்,தங்கள் தமுமுகவிலிருந்து 
தூக்கி சென்ற  பத்திரிகையில் இவரைப்பற்றி எழுதிய அவதூறுகள் கொஞ்ச நெஞ்சமல்ல,இது போன்ற எத்தனையோ  தடைக்கற்கள் அனைத்தையும்
படிக் கற்களாக்கி சமுதாயப் பேரமைப்பை வீரியத்தோடு வழிநடத்தினார்.

இதனால் கழகம் எனும் எல்லையை தாண்டி சமுதாய மக்களிடத்தில்"ஒரு
மக்கள் தலைவனாக"உருவெடுத்தார். இவரை புறக்கணித்த ஊர் ஜமாஅத்தார்களும் இவரை அரவணைத்துக் கொண்டனர்.

பின்னர் மாநில துணைச்செயலாளராக கழகத்தில் பணி உயர்வு அளிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்துக்கு வெளியேயும் சென்று கழகப் பணியாற்றினார்.இதன் மூலம் பல்வேறு தரப்பினரின் அன்பையும் பெற்றார்.குறிப்பாக புதுச்சேரியில் களமாடி வரும் மனித உரிமை போராளி கோ.சுகுமாரன் அவர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். அடிப்படையில் இவர்  ஒரு விவசாயி .., ஆதலால் விவசாய சங்கங்களுடன்   நல்லுறவை பேணி வந்தார்.

இன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் தமுமுக வடக்கு தெற்கு என்று இரண்டாக செயல்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது அல்லாஹ்வின் கிருபையால் தலைவர் ஜின்னா அவர்களின் உழைப்புதான்.

இன்றைக்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றும் சகோதரர் நெய்வேலி அபூபக்கர் சித்திக்,வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம்.ஷேக் தாவூத்,கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக வின் இன்றைய தலைவர் மானியம் ஆடூர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் போன்ற கழகத்தின் தளபதிகள் அனைவரும் தலைவர் ஜின்னாவின் பாசறையில் பயின்ற போராளிகளாவர்.

வயது வித்தியாசம் பாராமல் அணைவரிடமும் நல்ல மரியாதையோடு நடந்து கொள்வார்.இரவு 2 மணிக்கு போன் செய்தால் கூட கோபப்படாமல் பேசுவார்.
2006 ஆம் ஆண்டு நான் மலேசியாவில் இருந்த போது அங்கே இந்திய முஸ்லிம் சமூகத்தின் அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.கோலாலம்பூரில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்து கொண்டு,நான் வசிக்கும் ஈப்போ நகருக்கு அன்றிரவு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அப்பொழுது இந்தியாவில் நேரம் இரவு சுமார் 1 மணி இருக்கும்.அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் நான் தலைவர் ஜின்னா அவர்களுக்கு போன்  செய்து "கோலாலம்பூரில்  தலைவரை சந்தித்த" செய்தியை அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.அவரும் ஆர்வமாக என்னிடம் அந்த சமயத்திலும் கழக செயல்பாடுகள் பற்றி சளைக்காமல் கலந்துரையாடினார்.

பின்னர் 1 வருடம் கழித்து நான் தாயகம் திரும்பிய சமயத்தில் சிதம்பரம் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கழகத்தின் அப்போதைய பொதுச்செயலாளரும்,அன்றைய தமிழக வக்பு வாரியத் தலைவரும்,மூத்த தலைவருமான செ.ஹைதர் அலி அவர்களை விருந்தினர் மாளிகையில் சந்தித்து சில நிமிடங்கள் நான் பேசிக் கொண்டிருந்த போது  அங்கே வந்த தலைவர் ஜின்னா அவர்கள் என்னை பற்றி ஹைதர் அலி  அவர்களிடம்.. "இரவு 1 மணி 2 மணி ஆனாலும் என்னிடம் தொலைபேசியில் பேசக்கூடிய சகோதரர் இவர்" என்பதாக என்னைப் பற்றி சிலாகித்துக் கூறினார்.  
2007 ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றைக்கும் என்  கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கிறது.அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் கொள்ளுமேட்டில் தமுமுக சார்பாக "தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் தனி  இட ஒதுக்கீடு கூறி  ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு அன்றைய கழக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஜே.எஸ்.ரிபாயி அவர்களும் அன்றைய மாநில செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும் தேதி கொடுத்திருந்தார்கள்.

கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் கொள்ளுமேடு கிளை தமுமுக  சகோதரர்கள் இதற்காக மும்முரமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருந்தனர்.அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதிலுமுள்ள கிளைகளுக்கு நேரில் சென்று அழைப்பு கொடுப்பது என்று முடிவு செய்து அதன் படி மாவட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கினோம்.

அதில் இன்றைய கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக செயலாளரும்,அப்போதைய கொள்ளுமேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவருமான சகோதரர் என்.அமானுல்லாஹ்,அன்றைக்கு கடலூர் மாவட்ட தமுமுகவின் உலமாக்கள் அணி செயலாளராக இருந்த நான்,
கொள்ளுமேடு கிளை தமுமுக செயலாளர் வஜ்ஹுல்லாஹ்  ஆகியோர் காரில் பயணத்தை தொடக்கி நேராக தலைவர் ஜின்னா அவர்களின் வீட்டுக்கு சென்று அவரையும் எங்களின் சுற்றுப்பயனத்தொடு இணைத்து கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதும்   ஒவ்வொரு கிளைக்கும் சென்று பொதுக் கூட்டத்துக்காக அழைப்பு கொடுத்தோம்.




எல்லா ஊர்களையும் முடித்து விட்டு இறுதியாக லால்பேட்டையை நோக்கி நாங்கள் சென்றோம்.லால்பேட்டையை நெருங்கும் முன்பே தலைவர் ஜின்னா அவர்கள் அப்போதைய மாவட்ட துணைத் தலைவர் மர்ஹூம் முனவ்வர் ஹுசைன் அவர்களை தொடர்பு கொண்டு "நவ்வரு... நாங்க இப்போ லால்பெட்டைக்கு வந்து கொண்டிருக்கோம்.. நீ நேரா கைக்காட்டிக்கு வந்துடு"என்று என்பதாக அவரை வர சொல்லி விட்டார்.
அவரும் எங்களின் வருகைக்காக கைக்காட்ட்யில்  காத்துக் கொண்டிருந்த வேளையில்.... எங்களின் கார் கைக்காட்டியை நெருங்கும் பொது... எங்களோடு காரில் இருந்த கொள்ளுமேடு கிளை செயலாளர் வஜ்ஹுல்லாஹ் தலைவரிடம்... "தலைவரே... அங்கே  பாருங்க... நம்ம பட்டாம்பாக்கம் ரஜாக் நிக்கிறா மாதிரி தெரியிது"என்றார். 

(இந்த பட்டாம்பாக்கம் ரசாக் அவர்கள் தமுமுக 2004 ஆம் ஆண்டு பிரிவினை ஏற்படும் வரைக்கும்  தமுமுகவின் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தவர்.பின்னர் ததஜவுக்கு போய் அங்கே மாவட்ட செயலாளராக இருந்து,பின்னர் மாநில நிர்வாகியாக இருந்து கொண்டிருந்த சமயம்.)

உடனே தலைவர் வஜ்ஹுல்லாஹ்விடமும்,என்னிடமும் "நீங்க ரெண்டு பெரும் ரஜாக்'க்கு கிட்ட பேசிட்டு இருங்க... அந்த கேப்புல நான் வந்து அங்கே நுழைஞ்சிடுறேன்"என்றார்.நாங்கள் "என்ன....? என்று அவரிடம் கேட்ட பொது.. "தமுமுகவிலிருந்து  ரஜாக் வெளியில் போனதிலேர்ந்து அவரை நான் சந்திக்கவும்  இல்லை... போன்ல பேசலாம்ன்னு அவர் மொபைல்க்கு போன் செஞ்சா அப்பவும் அவர்கிட்ட பேச முடியிறது இல்ல...இன்னிக்கி நல்ல சந்தர்பம்.. ரஜாக்'கை எப்படியாவது சந்திச்சிரனும். என்றார்.
உடனே நானும் வஜ்ஹுல்லாஹ்வும் காரிலிருந்து இறங்கி... ரஜாக்'கை நோக்கி  சென்று சலாம் சொல்லி கை கொடுத்து தலைவரின் ப்ளான் படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்த சமயத்தில் தலைவர் அங்கே  நுழைந்து ரஜாக் அவர்களின் கரங்களை பிடித்து கொண்டு.."ராஜாக்கு... எப்படி இருக்கே..? என்று அவரிடம் அக்கறையோடு நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
( இங்கே இன்னொரு முக்கியமான விசயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்.மலேசியாவுக்கு போயிருந்த  பிஜே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,அவ்வாறு அவர் வெளியேற்றப்பட்டதற்கு
 தமுமுகவும்,தமிமுன் அன்சாரியும் தான் காரணம் என்று வழக்கம் போல அண்ணன் பிஜே தமுமுகவை "காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்ததால்,
அப்பொழுது  ததஜவினர் "ரொம்பவும் தமுமுகவினர் மீது கொலைவெறியில் இருந்தனர்.இந்த சமயத்தில் தான் ஜின்னா - ரசாக்
இடையில் சந்திப்பு நடைபெறுகிறது.)

தமக்கு துரோகம் இழைத்தவர்களோடும் கூட நல்லுறவை பேண வேண்டும் என்று விரும்பிய அந்த நல்ல இதயம் இன்று நம்மை விட்டு அல்லாஹ்வின் பால் சென்று விட்டது என்ற தகவல் என் காதுகளில் எட்டியபோது எனது இதயம் சுக்கு  நூறாகிப் போனது.

கடந்த ஆண்டு சிதம்பரம் நகருக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் வருகை தந்த போது,அன்றைய தினத்தில் தான்  தலைவரை நான் கடைசியாக நேரில் சந்தித்தேன்.கடந்த ரமளானில் திடீரென நான் அமீரகத்துக்கு புறப்பட வேண்டிய கட்டாய சூழல் உருவான போது ,தலைவரை நேரில் சென்று சந்தித்து என்னால் விடைபெற முடியவில்லை.. விமான நிலையத்துக்கு காரில் பயணித்துக் கொண்டே.. தலைவரிடம் பயணம் சொன்னேன்.அப்பொழுது கூட அவர் என்னிடம்... "என்ன ரிபாயி... உன்கிட்ட நேரில் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்... முடியாமல் போயிடுச்சே..."என்று வருத்தப் பட்டார்.தொலைபேசியிலேயே நீண்ட 
நேரம் இயக்க-சமுதாய விசயங்களை என்னிடம் அப்பொழுது பேசினார். 

கடந்த வருடம் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தை அவர் செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரத்தில் தலைமையேற்று நடத்தினார்.அன்றைய தினத்தில் விடுமுறையில் தாயகம் சென்றிருந்த வேளையில்,காஞ்சி மாவட்டத்தில்  விபத்து ஒன்றில் சிக்கி பலியான அமீரகத்தில் (தமுமுக நிர்வாகியின் நிறுவனத்தில்) பணியாற்றிய ஒரு மாற்று மத பொறியாளர் சம்பந்தமாக அவரிடம் பேசினேன்.இதுவே அவரிடம் நான் கடைசியாக பேசியது.

தலைவரே...... என்று உம்மை நான் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம்... "சொல்லுங்க ரிபாய்"..... என்று சொல்வீரே.... இனி உன் குரலை கேட்க முடியாமல் போயிடுச்சே.......
இன்ஷா அல்லாஹ் உம்மை நான் மறுமையில் சந்திக்கிறேன்...

அல்லாஹ் உமது பாவங்களை மன்னித்து உமது சேவைகளை அங்கீகரித்து... ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் உம்மை சேர்ப்பானாக என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி 
அல் அய்ன்.




சனி, 4 ஆகஸ்ட், 2012

அன்பான அதிரை சொந்தங்களே..!!

அன்பான அதிரை சொந்தங்களே..!!






அல்லாஹ்வின் திருப்பெயரால்…


அஸ்ஸலாமு அலைக்கும்,


அன்பான அதிரை சொந்தங்களே..


அதிரை தமுமுக கிளை சார்பாக இந்த வருடம் (2012) சஹர் உணவு பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் நோன்பு பிறை ஒன்று முதல் மிக சிறப்பாக அதிரை ஜாவியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வெளியூர் நோன்பாளிகள் பயன்பெற்றுவருகிறார்கள்.
எங்கள் சமுதாய சேவைகளுக்கு உதவிகள்  செய்துவரும் எல்லா நல்லுள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நல்லருள் புரிவானாக. எங்கள் சமுதாய சேவை தொடர் நீங்கள் அனைவரும் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.




இப்படிக்கு


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
த.மு.மு.க. நகர கிளை - அதிரை
தொலைபேசி : 9003127748, 9942033233
அதிரை தமுமுக நகர கிளை

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

திருவாரூர் மாவட்ட தமுமுக ம.ம.க வின் நிர்வாகக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்ட தமுமுக ம.ம.க வின் நிர்வாகக்குழு கூட்டம்





திருவாரூர் மாவட்ட தமுமுக ம.ம.க வின் நிர்வாகக்குழு கூட்டம் 31-07-2012 அன்று பொதக்குடியில் தமுமுக ம.ம.க மாவட்ட தலைவர் அண்ணன்.கே.ஹெச். நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராய் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம்.எம்.தாஜூதீன் அவர்கள் கலந்துகொண்டார்கள். இந் நிர்வாககுழு கூட்டத்தில் தமுமுக வின் மாவட்ட செயலாளர் பொதக்குடி குத்புதின், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் மன்னை அஹமது, ம.ம.க மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை மாலிக், ம.ம.க மாவட்ட துணைசெயலாளர் திருவாரூர் பஜ்லுல் ஹக் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நஷ்டஈடும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடும் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டன.