திங்கள், 25 நவம்பர், 2013

எழுச்சித் தலைவர் யாசர் அரபாத்!


எழுச்சித் தலைவர் யாசர் அரபாத்!


எம். தமிமுன் அன்சாரி (ம.ம.க பொதுச்செயலாளர், மக்கள் உரிமை ஆசிரியர்)

பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்! அவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்!

அகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த தொலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் டெஸ்ட் ட்யூட் பேபி’.

இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன.

சோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போராளி தோன்றினார்.

வல்லரசுகளின் துணை கொண்டு, இஸ்ரேல் எனும் ஆற்றல்மிகு தேசத்தை நடுநடுங்க வைத்தார். தலைமறைவு போராளியாய் வலம் வந்து, கொரில்லா தாக்குதலை அறிமுகப் படுத்தி இஸ்ரேலின் இறுமாப்பைக் குலைத்தார்!

வலிமையான ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலியர் களின் தலைகளில் இடிகளாய் இறங்கினர் பி.எல்.ஓ. போராளிகள்.

உலகின் தலைசிறந்த உளவுப் படையான மொசாத்பாலஸ்தீன விடுதலைப் போராளிகளின் சாகசங்களைக் கண்டு திணறியது. யாசர் அரபாத்தையும், அவரது தளபதிகளையும் கொல்ல முயன்று தோற்றது.

யாசர் அரபாத்தின் எழுச்சியையும், விடுதலை முழக்கத்தையும் உலக நாடுகள் வரவேற்றன. நாடொன்று அமையாமலேயே, உலகின் பல நாடுகளில் தூதரகங்களைத் திறந்தது பி.எல்.ஓ.! உலகின் விடுதலை இயக்கங்கள் யாருக்கும் கிடைக்காத கௌரவம் அது!

ஐ.நா.சபையால் உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரே விடுதலைப் போராட்டத் தலைவரும் யாசர் அரபாத் மட்டும்தான்!

அமெரிக்கா வழியாகத்தான் ஐ.நா.வுக்கு செல்ல முடியும் என்ற இழிநிலை இன்றும் தொடரும் நிலையில், அன்று அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது.

அவருக்காக வேண்டி ஐ.நா.வின் சிறப்புக் கூட்டம் ஜெனீவாவில் நடத்தப்பட்டது. பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஐ.நா. அவையில் கர்ஜித்தார்.
ஆலிவ் இலைகளையும், சமாதானப் புறாக்களையும் கைகளில் ஏந்தி வந்துள்ளேன். எங்கள் விடுதலையை மறுக்காதீர்கள்என அவர் நிகழ்த்திய உரை, உலகை உலுக்கியது. எதிரிகளையும் ஈர்த்தது.

சேகுவாராவைப் போன்றே இவரையும் மேற்குலகின் ஆட்சியாளர்கள் ஏளனம் செய்தனர். ஆனால், ஆசிய&ஆப்பிரிக்க நாடுகளையும் தாண்டிய விடுதலைப் போராளியாக உலகம் அவரை மதித்தது.

அவரைக் கொலை செய்ய இஸ்ரேலும், அமெரிக்காவும் எடுத்த முயற்சிகளை பாலஸ்தீன உளவு அமைப்பு முறியடித்துக் கொண்டே வந்தது. அதேபோல பல்வேறு விபத்துகளிலிருந்தும் இறையருளால் அவர் தப்பித்துக் கொண்டே வந்தார்.
ஒரு சுதந்திர நாட்டின் அதிபருக்குரிய மரியாதையோடு அவரைப் பல நாடுகள் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைகளைக் கேட்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
இந்தியாவின் உற்ற நண்பராகவும், இந்தியாவை நேசித்த தலைவராகவும் இருந்தார். அதனால்தான் சந்திரசேகர் பிரதமராக இருந்தவரை இஸ்ரேலின் தூதரகம் இந்தியாவில் திறக்கப்படாமல் இருந்தது.

அவர் இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும் நெருங்கிய நண்பராக இருந்தார். ராஜீவைப் படுகொலை செய்ய சதி நடப்பதாக பி.எல்.ஓ.வின் உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், அதை ராஜீவுக்கு தெரியப்படுத்தினார்.

ராஜீவ் கொல்லப்பட்ட போது, கண்ணீரோடு டெல்லிக்கு ஓடோடி வந்தார் யாசர் அரபாத்!

உலக விடுதலை இயக்கங்கள் யாசர் அரபாத்தை முன்னோடி தலைவராக ஏற்றுக் கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை அமைப்புகளின் போராளிகள் பி.எல்.ஓ.விடம் பயிற்சிப் பெற்றது ஒரு முக்கிய நிகழ்வாகும்!

யாசர் அரபாத் ஒரு பொறியாளர். ஒரு பொறியாளருக்கே உரிய நுட்பங்கள் அவரிடம் நிறைந்திருந்தன.

அவர் ஒரு கொரில்லா படையை வழிநடத்தியவராக மட்டுமின்றி, ஒரு ராணுவ நிபுணராகவும் செயல்பட்டார். அதுதான் பி.எல்.ஓ.வின் பல வெற்றிகளுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தது.

எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் அவர் ஒரு அரசியல் நெறியாளராகவும், பன்முக சமூகங்களை அரவணைக்கும் ஆற்றல் நிரம்பியராகவும் திகழ்ந்தார்.
யூதர்களை எதிர்க்க கிருஸ்தவர்களுடன் நல்லிணக்கம் பேணுவதன் அவசியத்தை உணர்ந்தார். பாலஸ்தீன அரபு கிறித்தவர்கள் ஏற்பாடு செய்யும் கிறிஸ்துமஸ் விருந்திலும் பங்கேற்றார். வழிபாடு வேறு, நேசம் வேறு என்பதை பக்குவமாக வெளிப்படுத்தினார்.

அவருக்கு பக்கபலமாக இருந்த சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறிய பிறகு, உலகில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை உள்வாங்கினார்.

இனி நெடுங்காலத்திற்கு அமெரிக்காதான் உலகின் ஒற்றை வல்லரசாக கோலோச்சும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயலாற்றினார்.

அமெரிக்க அதிபராக கிளிண்டன் செயல்பட்ட போது பாலஸ்தீன&இஸ்ரேல் பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வு காண முயன்றார். மேற்கு கரையையும், காஸாவையும் உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

இஸ்ரேலை ஒழிப்பதே ஒரே நோக்கம்என்ற பிடிவாத நிலையில் இருந்த அரபு நாடுகளும், அரபுகளும் இதை ஏற்கத் தயங்கினர். இஸ்ரேலியர்களை வரலாற்று எதிரியாக பாவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் முழு உடன்பாடில்லை.

யாசர் அரபாத் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டார்! இஸ்ரேலை ஒழிக்கும் அளவுக்கு படைபலமோ, ஆயுத பலமோ அரபு நாடுகளில் யாருக்கும் இல்லை. அவர்கள் யாரும் போரிடவும் தயாராக இல்லை. அவர்கள் நன்கொடையாளர்கள் மட்டுமே!

போரும், போரினால் ஏற்படும் அவலங்களும் களத்தில் இருப்பவர்களுத்தானே தெரியும்! வெறும் பார்வையாளர்களால் விடுதலையைப் பெற்றுத்தந்துவிட இயலாது அல்லவா? சோவியத் யூனியனும் சிதறிவிட்டது. போரும் முடிவுக்கு வந்தபாடில்லை. 
எனவே, தீர்க்கமான முடிவுக்கு வந்தார். தனது வாழ்நாளில் குறைந்தபட்ச அதிகாரத்து டனாவது சுதந்திர பாலஸ்தீனத்தைப் பெற்றுவிடுவது என்றும், அடுத்துவரும் தலைமுறை மற்றதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்றும் தீர்மானித்தார்!

கிளிண்டன் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் இட்ஷாக் ராபினுடன் அவர் கையெழுத்திட்டார். ஒருபக்கம் கண்டனம்! இன்னொரு பக்கம் வரவேற்பு! இதனால் அவருக்கு நோபல் பரிசும் தேடிவந்தது.

உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு; யதார்த்தங் களைப் புரிந்துகொண்டு; மனசாட்சியோடு யோசித்ததால்; யாசர் அரபாத் சரியான முடிவையே மேற்கொண்டார் எனலாம். ஆனால் இஸ்ரேல், கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை.
மனம் வெதும்பிய யாசர் அரபாத், மனம் தளராமல் உலக நாடுகளின் ஆதரவைத் தக்கவைப்பதில் தீவிரம் காட்டினார். அவரது அணுகுமுறைகளால் தான் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டம் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.

பூத்துக் குலுங்கும் இளமைக் காலத்தில் புயலாய் புறப்பட்டவர், வயோதிகம் வரவேற்கத் தொடங்கிய போது வாட்டம் கண்டார். ஆனாலும், போராட்டக் குணம் மாறவில்லை. இஸ்ரேலிய எதிர்ப்பில் உறுதியாக நின்றவர், ரமல்லா நகரில் வீட்டுச் சிறையில் இருக்க வேண்டிய துன்பத்திற்கு ஆளானார். ஓஸ்லோஉடன்படிக்கையை நிறைவேற்றாத இஸ்ரேலின் வஞ்சக சதியில் சிக்குண்டார்.

இஸ்ரேலின் டாங்குகளும், பீரங்கிகளும் அவரது வீட்டைச் சுற்றி நிறுத்தப்பட்டன. யாரும் சந்திக்க முடியவில்லை. இஸ்ரேல் கொடுக்கும் உணவை மட்டுமே அவர் உண்ண வேண்டும் என்ற நிலை வந்தது. 

அவரை சுட்டுக் கொல்லும் வாய்ப்பு இஸ்ரேலுக்கு முழுமையாக இருந்தது. ஆனாலும், இஸ்ரேல் பயந்தது! அவரை சுட்டுக் கொன்றால் அதனால் ஏற்படும் பேரழிவுகளை நினைத்து நடுங்கியது. மறுபுறமும் உலக மக்களின் அனுதாபமும், ஆதரவும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கூடிவிடுமே என்றும் தயங்கியது. அதனால் தான் மெல்லக் கொல்லும் விஷத்தை அவருக்கு உணவில் கலந்து கொடுத்தனர்.

அந்த எழுச்சித் தலைவர் போலோனியம் (polonium) என்ற மெல்லக் கொல்லும் விஷம் தனக்கு உணவு வழியாக கொடுக்கப்படுகிறது என்பதை அறியாமலேயே போனார்.

அந்த விஷம் தோட்டாக்கள் தொட அஞ்சிய இரும்பு மனிதனை வீழ்த்தியது. பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனையில் சிகிச் சைப் பெற்ற அரபாத், பலனின்றி இறந்தார்.
அப்போது அவர் இயற்கையாகவே மரணமடைந்தார் என்று உலகம் நம்பியது. உலக மக்கள் உருக; அரபுகள் அழுக; பாலஸ்தீனர்கள் கதற; யாசர் அரபாத் அடக்கம் செய்யப்பட்டார்.

அடங்காதப் போராளியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகுதான் அவரது மரணம் குறித்த சந்தேகங்கள் எழுந்தன.

இதோ, அவரது உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு விஞ்ஞான & மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

உணவில் நஞ்சு கலந்துதான் அவர் கொல்லப்பட்டார் என்ற உண்மையை கடந்த வாரம் உலகம் கண்டுகொண்டது.

போர்முனை புலவனாக; புல்லாங்குழலிலும் வெடிமருந்துகளைப் பரப்பிய வீரனாக; டெல்&அவிவின் திமிரை அடக்கிய தலைவராக வலம்வந்த யாசர் அரபாத்தை; நேருக்கு நேர் சந்திக்கத் திராணியற்ற இஸ்ரேல், அவரை வஞ்சகமாக கொன்றிருக்கிறது.

நமது வரலாற்று எதிரியின் கோழைத்தனத்தை உலகம் கண்டுவிட்டது! டெல் அவிவின் திமிரை அடக்க அய்யாஷுகளும், அரபாத்து களும் ஷேக் அஹ்மது யாஸின்களும் வந்து கொண்டே இருப்பார்கள்!

அரபாத்தும் - ஷேக் அஹ்மது யாஸினும்

பாலஸ்தீன விடுதலையில் குறிப்பிடத்தகுந்த தலைவர்களும், தளபதிகளும் ஏராளம்! அங்கு பிறந்து வாழும் ஒவ்வொருவரும் போராளிகள் தான். ஆனால் வரலாறு சிலரை மட்டுமே புகழ்பெற வைக்கும்! அதில் யாசர் அரபாத்தும், ஹமாஸின் தலைவர் ஷேக் அஹ்மது யாஸினும் குறிப்பிடத்தக்கவர்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கம் அரசியல், ஜனநாயகம், போர் ஆகியவற்றில் தேர்ந்த ராணுவமாக செயல்பட்டது.

ஹமாஸ், தீவிரப் பற்றுள்ள இஸ்லாமிய இயக்கமாக தன்னை முன்னிறுத்தி களமாடியது.

யாசர் அரபாத் 1929ல் கெய்ரோவில் பிறந்தவர். இன்ஜினியரிங் கல்வி கற்றவர். ஷேக் அஹ்மது யாஸின் 1937ல் பாலஸ்தீனத்தில் பிறந்தவர். எகிப்தின் புகழ்பெற்ற அல்&அஹ்ஸர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

இருவரும் இஸ்ரேலுக்கு எதிராக சிங்கமும், சிறுத்தையுமாக இயங்கியவர்கள். இருவருமே ஒரே வருடத்தில் (2004) அடுத்தடுத்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஷேக் அஹ்மது யாஸின், கால் ஊனமுற்றவர். சக்கர நாற்காலியில் அமர்ந்து சரித்திரம் படைத்தவர். அவரை 2004 மார்ச் 22ல் குண்டுவீசி இஸ்ரேல் கொன்றது. அதே வருடம் நவம்பர் 11 அன்று யாசர் அரபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.

அமைப்புகள் இரண்டாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகவே இருந்தன. ஹமாஸ் தலைவர் ஷேக் அஹ்மது யாஸினைத் தேடிவந்து சந்தித்தார் அரபாத். இருவரும் கன்னத்தோடு கன்னம் வைத்து அன்பை வெளிப்படுத்தினர்.

இச்சந்திப்பு பற்றி கூறிய அரபாத், “நாங்கள் ஒரு பறவையின் இரு சிறகுகள்என்றார். ஆம்! ஒரே நோக்கத்திற்காக களத்தில் போராடும் வெவ்வேறு இயக்கத் தலைவர்கள் அறியவேண்டிய செய்தி இதுவாகும்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக