செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நல்ல கூட்டணியோடு தேர்தலில் போட்டி: மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேட்டி

நாகப்பட்டினம்: தமிழகத்தில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணியோடு சேர்ந்து, மனித நேய மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என்று மாநில தலைவர் ஜவாஹிருல்லா, நாகையில் கூறினார்.

நாகையில், த.மு.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மனித நேய மக்கள் கட்சி வரவேற்கிறது. கடந்த 2004ம் ஆண்டு சிறுபான்மையின மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் உறுதியளித்தது. ரங்கநாத் மிஸ்ரா சமர்ப்பித்த மூன்று பரிந்துரைகளில் மதவழி சிறுபான்மை மக்களுக்கு 15 சதவீதம், முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது பரிந்துரையான தலித் மக்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு சலுகைகள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இதை நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் ஜாதி வாரியாக நடக்கும் என முதல்வர் கூறியதை வரவேற்கிறோம். அனைத்து கட்சியினர், சமூக நல இயக்கங்களை அழைத்துப் பேசி அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.

தமிழக அரசு, குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான சான்றிதழை பெற மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில், வரும் சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணியோடு சேர்ந்து மனித நேய மக்கள் கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. எது நல்ல கூட்டணி என்பதை பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

நாகையில் தமுமுக நடத்திய முப்பெரும் விழா.

நாகையில் தமுமுக வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மையம், மாணவ மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி திட்டம் என முப்பெரும் விழாவை நடத்தியது. அன்று இரவு மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் அரசியல் பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த அனைத்து நிகழ்சிகளிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்... இதன் இறுதியில் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

அதில் இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக